கன்னியாகுமரி, செப். 23 –
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி குமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்று காலை தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் 2-ம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
1-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்க கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் உற்சவ அம்பாளை கோவில் மேல் சாந்தி மேளதாளம் முழங்க கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக கொலு மண்டபத்துக்கு எடுத்துச் சென்று அங்கு அம்மனை எழுந்தருள செய்தனர்.
அதன் பிறகு கொலுமண்டபத்தில் எழுந்தருளி இருந்த பகவதி அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும், விசேஷ பூஜைகளும் நடந்தது. கொலு பொம்மைகளை 9 அடுக்குகளாக அலங்கரித்து வைத்து இருந்தனர். கொலு மண்டபத்தில் எழுந்தருளிய பகவதி அம்மனையும், அங்கு அலங்கரித்து வைத்திருந்த கொலுவையும் திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அம்மன் நவராத்திரி திருவிழாவையொட்டி 10 நாட்களும் அம்மனுக்கு காலை 10 மணிக்கு நடக்கும் அபிஷேகத்துக்கான புனித நீர் விவேகானந்த புரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விசுவநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக் குடத்தில் யானை மீது கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவுக்கு யானை வரவழைக்கப்படவில்லை. மாறாக கோவில் பூசாரி 2 கிலோமீட்டர் தூரம் தலையில் சுமந்து நடந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு ஆன்மீக உரையும்,இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக் கலைமான் வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி மேள தாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவை நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது 11:30 மணிக்கு அலங்கார தீபாரதனையும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் மாலை 6:30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும் நடைபெறும். இரவு 7 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம்,பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க கோவிலைச் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது 10-ம் திருவிழாவான 2-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் அலங்கார மண்டபத்தில் அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தில் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்கபுரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது வீதி உலா முடிந்தது அம்மன் வெள்ளிப்பல்லத்தில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்குஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்கள் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.



