கன்னியாகுமரி, மே 29 –
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வைகாசி பெருந்திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா நாளை (சனிக்கிழமை) வரை தொடர்ந்து நடைபெறும். திருவிழாவையொட்டி தினமும் அபிஷேகமும், 11.30 மணிக்கு அவங்கார தீபாராதனையும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மாலை சமய உரையும், இரவு இன்னிசை கசச்சேரியும், இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது வந்தது.
9 ஆம் திருவிழாவான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் இருந்து காலை 9.15 மணிக்கு வெள்ளி பல்லக்கில் உற்சவ அம்மனை அலங்கரித்து சன்னதி தெரு, கன்னியம்பலம் மண்டபம், தெற்கு ரதவீதி, நடுத்தெரு வழியாக தேர் நிற்கும் கீழரத வீதிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்றனர். அதன் பிறகு உற்சவ அம்மனை பட்டு மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்தனர்.
அதைத்தொடாந்து தேரில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் விசேஷ தீபாராதனை போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து 10 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைத்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தர்வடம் தொட்டு தொடங்கி வைத்தார். குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் மேலாளர் ஆனந்த் உட்பட பக்தர்களும், திரளான சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். ரத வீதி வழிநெடுகிலும் பக்தர்கள் உயரமான கட்டிடங்களில் இருந்து தேரின் மீது மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.
தேரோட்ட நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 10 மணி வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. 10 மணிக்கு பிறகு போக்குவரத்து வழக்கம்போல் தொடங்கி நடைபெற்றது.
10-ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும், 6 மணிக்கு ஆன்மீக உரையும், இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.



