ஈரோடு, டிச. 12 –
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோட்டில் வருகிற 18 ந் தேதி பிரசாரம் செய்ய உள்ளார்.
பெருந்துறை சரளை என்ற இடத்தில் உள்ள காலி இடத்தில் இந்த கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே ஏ செங்கோட்டையன் ஆய்வு செய்து கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை இந்த இடத்தில் கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையிடம் கடிதம் கொடுத்தாலும், திட்டமிட்டபடி தவெகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெறும். இந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு எந்த தடையும் இல்லை. எனவே திட்டமிட்டபடி தவெகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் இங்கு நடைபெறும்.
வருகிற 18 ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணிக்குள் நடைபெற உள்ள தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தலைவர் விஜய் பங்கேற்று பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம். எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அலுவலர்கள் செய்து தர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு கூறி வரும் ஆலோசனைகளை ஏற்று பொதுக்கூட்டத்திற்கான பணிகளை செய்து வருகிறோம்.
பாண்டிச்சேரிக்கு பிறகு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டம் வரலாறு படைக்கப் போகிறது.
நேற்று சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்களின் அடிப்படையில் நாங்கள் செயல்பட தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் முதலமைச்சராக விஜயை அரியணையில் ஏற்ற பாடுபடுவது, தவெகவின் தலைமையை ஏற்று கொள்ள இருக்கும் கட்சிகளை கூட்டணியில் இணைத்துக் கொள்வது என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை இங்கு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரிடம் மட்டுமே கடிதம் கொடுத்துள்ளனர். இந்த இடத்தில் கூட்டம் நடத்துவதற்கு எங்களுக்கு எந்த தடையும் இல்லை. எனவே திட்டமிட்டபடி தவெகவின் தேர்தல் பரப்புரை கூட்டம் இங்கு நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது முன்னாள் எம் பி சத்திய பாமா, தமிழக வெற்றிக் கழக ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பாலாஜி, மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப், மாவட்ட இணை செயலாளர் அக்கிம், துணை செயலாளர் பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



