நாகர்கோவில், மார்ச் 24 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன்ஒருபகுதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், ஆகியோர் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் கூறுகையில்: குமரி மாவட்டத்தில் மொத்தம் 137 பதற்றமான மற்றும் கவனிக்கத்தக்க வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, கன்னியாகுமரி சட்டன்ற தொகுதிக்குட்பட்ட தடிக்காரன்கோணம் கிறிஸ்தவ நல மேல்நிலைப்பள்ளி, திட்டுவிளை அரசு மேல்நிலை மற்றும் தொடக்கப்பள்ளி, மாதவாலயம் அரசு மேல்நிலைப்பள்ளி, லீபுரம் அரசு தொடக்கப்பள்ளி, ஒற்றையான்விளை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி, மேலகிருஷ்ணன்புதூர் அரசு நடுநிலைப்பள்ளி, அத்திகாட்டுவிளை அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதை தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்கள் உறுதி செய்திட வேண்டும். பதட்டமான அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா வசதிகள் ஏற்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என கலெக்டர் கூறினார்.
இந்த ஆய்வின் போது கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், துறை அலுவலர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



