நாகர்கோவில், ஜூலை 15 –
கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி கடற்கரையில் பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் அமைந்துள்ளது. இன்று பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய் சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது 1956 -ஆம் ஆண்டு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். 1960 ஆண்டு ஏழைப் பிள்ளைகள் அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தவர். தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான மாத்தூர் தொட்டிப்பாலம் அமைத்தார். விடுதலைப் போராட்டத் தொண்டனாக வாழ்வை தொடங்கித் தன்னலமற்ற உழைப்பால், தியாகத்தால், மக்கள் தலைவராக உயர்ந்து, கோடிக்கணக்கான இதயங்களில் குடி கொண்டிருப்பவர் பெருந்தலைவர் காமராஜர். அவரின் பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், கன்னியாகுமரி நகர்மன்ற தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



