சேலம். செப்.03.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் வீ கோல்ட் நிறுவனத்தில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வரும் முகேஷிடம், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் தனது மனைவி சுஷ்மிதா பெயரில் முத்தூட் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களில் அடகு வைத்துள்ள தங்க நகைகளை மீட்டு, விற்பனை செய்துவிட்டு மீதமுள்ள பணத்தை வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அடகு ரசீது மற்றும் ஆதார் விவரங்களையும் முகேஷின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த மாதம் 11-ம் தேதி ரூ.10 லட்சம் பணத்துடன் முகேஷ் சூளகிரிக்கு சென்றுள்ளார்.
அங்கு கோவிந்தராஜ், அவரது மனைவி சுஷ்மிதா, அவரது சகோதரர் சுஜிக்குமார் உள்ளிட்ட 5 பேர் முகேஷை சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்திற்கு செல்ல முயன்றபோது, கோவிந்தராஜ் திடீரென கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி, முகேஷிடம் இருந்த ரூ.10 லட்சத்தை பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து தனது தந்தையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த முகேஷ், பணத்தை மீட்டுத்தரக்கோரி புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னை கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்தை பறித்துச் சென்றதாகவும், புகார் அளித்தும் பல நாட்களாகியும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் வேதனை தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட ரூ.10 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.



