மார்த்தாண்டம், ஜூலை 22 –
அருமனை அருகே உள்ள மலையோர கிராமங்களில் சமீப காலமாக காட்டு யானைகள் உலாவி வருவது அதிகரித்து வருகிறது. மலையில் இருந்து வெளியேறும் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி கிராம பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று அருமனை அருகே குற்றியார் பகுதியில் குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டமாக வந்தன. பின்னர் அங்குள்ள அம்மன் கோயில் அருகே நின்ற யானைகள் கூட்டம், தொடர்ந்து சாலையோரமாக சென்றது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தினார்கள்.
இதையடுத்து குட்டிகளுடன் உலாவிய யானைகள் குற்றியாறில் உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. இதனால் நிம்மதி பெருமூச்சு விட்ட பொதுமக்கள் அங்கிருந்து வாகனங்களில் சென்றனர். இதற்கு இடையே பொதுமக்கள் சிலர் யானைகள் கூட்டம் சென்றதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே இன்று காலை கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட பேணு எந்த இடத்திற்கு வந்த மூன்று காட்டு யானைகள் அங்குள்ள தென்னை தோப்புக்குள் சென்றன. பின்னர் அந்த யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தியதுடன், தென்னை குருத்துகளை தின்று அட்டகாசம் செய்தன. இதனை அடுத்து யானைகள் அங்கு உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. யானைகள் வந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் தற்போது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



