தென்காசி | செப்.17:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பம் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. தென்காசி மாவட்ட சிலம்பம் சங்கத்தின் 4-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
4 வயது முதல் 10 வயது வரையிலான மினி சப்-ஜூனியர், 10 முதல் 14 வயது வரையிலான சப்-ஜூனியர், 14 முதல் 17 வயது வரையிலான ஜூனியர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட சீனியர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. சங்க தலைவர் சிவமணி போட்டியை தொடங்கி வைத்தார்.
போட்டியில் சங்கரன்கோவில், புளியங்குடி, சிவகிரி, கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மேலும், மான் கொம்பு, சுருள்வாள், வேல்கம்பு உள்ளிட்ட தற்காப்புக் கலைப் பயிற்சிகளையும் மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட சிலம்பம் சங்க துணைத் தலைவர் மணிகண்டன் செய்திருந்தார்.



