நாகர்கோவில், ஜூலை 24 –
குமரி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டு செயலில் இருந்து வருகிறது. ஆனாலும் சிலர் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடைபிடிக்காமல் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பள்ளி, கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்பவர்களுக்கு கடும் தாமதம் ஏற்படுவதால் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் விபத்துகள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை தோட்டியோடு சந்திப்பு பகுதியில் நேற்று காலை திடீரென எஸ்பி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது இரணியல் காவல் ஆய்வாளர் செந்தில்வேல், குளச்சல் போக்குவரத்து ஆய்வாளர் சுஜாதா, உதவி ஆய்வாளர்கள் சிதம்பரதாணு, சுரேஷ்குமார், மற்றும் போக்குவரத்து போலீசார் உடன் இருந்தனர். அப்போது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக சாலை போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்டு வந்த கனரக வாகனங்கள் மற்றும் டெம்போக்களை சோதனை செய்த போது சில வாகனங்கள் முறையான ஆவணங்கள் இன்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, அனுமதி இன்றியும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் வந்த 15க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்ததுடன் இனி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவும் முறையான அனுமதி இஞ்சியும் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.



