திருப்பூர், ஆகஸ்ட் 12 –
எல்.ஆர்.ஜி. அரசு கலைக் கல்லூரியில் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் மற்றும் தமிழக அரசின் அறிவுரைபடி போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் போதைப் பொருளுக்கு எதிரான கையொப்பமிடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதில் திருப்பூர் மாநகர போக்குவரத்து உதவி ஆணையர் சேகர் கே.ஆர்.எஸ். கல்வி நிறுவனத்தை சேர்ந்த தாளாளர். முனைவர், ஜோய்சேகர், இயற்கை – யசோதா, எல்.ஆர்.ஜி. அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர் நளினி மற்றும் எல்.ஆர்.ஜி. அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த 1600 மாணவிகள் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன்.
நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்கு உள்ளவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்கேற்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்ற கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மேலும் உதவி ஆணையர் A. சேகர், மாணவிகளுக்கு கீழ்க்கண்ட உறுதிமொழிகளை எடுத்துக் கூற 1600 மாணவிகளும் உற்சாகத்துடன் திரும்ப கூறி கீழ்க்கண்ட உறுதிமொழி ஏற்றனர்.
தடுப்போம்! தடுப்போம்!! போதைப் பொருட்களை தடுப்போம்!!! ஒழிப்போம்! ஒழிப்போம்!! போதைப் பொருளை ஒழிப்போம்!!
இன்று முதல் தமிழ்நாட்டில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர் பிரச்சாரத்தை ஆதரிப்பேன் என்றும், போதைப் பொருட்களை ஒழிக்க அரசுக்கு துணையாக இருப்பேன் என்றும் இங்கு கையெழுத்து இடுகிறேன். இந்த உறுதிமொழி ஏற்று அனைத்து கல்லூரி மாணவிகளும், பேராசிரியர்களும் கையொப்பம் இட்டனர்.



