நாகர்கோவில், நவ. 10 –
நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பசுவதைத் தடைச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று பலர் முயற்சி செய்த நேரத்தில் அதை பெருந்தலைவர் காமராஜர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்காக காமராஜர் கொலை முயற்சி சம்பவம் நடந்தது. அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜனதா கட்சி பெருந்தலைவர் காமராஜரை பயன்படுத்துவது எந்த விதத்திலும் காமராஜ் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.
குமரி மாவட்டத்தில் மத பிரச்சனை, பெரிய தீவிரவாத செயல்கள் இருப்பது போன்று பொன் ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். மக்கள் ஒற்றுமையோடு அன்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். எந்த பிரச்சனையும் இல்லை. பொன்.ராகிருஷ்ணன் மற்றும் பா.ஜனதா போன்ற கட்சிகள் நடுநிலையான எண்ணத்துக்கு வர வேண்டும்.
குமரி மாவட்டத்தில் 43 குவாரிகள் இருந்தது. தற்போது 4 மட்டும் இருக்கின்றன. 39 குவாரிகளை முடியுள்ளோம். குமரி மாவட்டத்தில் இந்த குவாரிகளும் இருந்திருக்காது. முதலில் காடுகளில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு குவாரிகள் இருக்க கூடாது என்று வழிகாட்டி நெறிமுறைகள் இருந்தது. ஆனால் அதை 3 கி.மீ. என்று மாற்றினார்கள். இதனால் தான் தற்போது 4 குவாரிகள் உள்ளன.இந்த ஒட்டுமொத்த தவறுக்கும் பொன். ராதாகிருஷ்ணனும், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வும் தான் காரணம்.
எங்கள் மீது அவதூறு பேசுபவர்கள் மீது வழக்கு தொடர இருக்கிறேன். விளக்க நோட்டீஸ் அனுப்பி விட்டோம். கோர்ட்டில் நிச்சயமாக வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்காக பா.ஜனதாவிடம் மன்னிப்பு கேட்டதாக பொன்.ராதாகிருண்னண் கூறியுள்ளார். அவர் வயதாகி பேசுகிறாரா என்று தெரியவில்லை.
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த விஷயத்தில் மாவட்ட மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். திருத்தம் தொடர்பாக நிறைய கேள்விகள் கேட்டுள்ளனர். பல கருத்துக்களை பொதுமக்கள் சொல்கிறார்கள். அதிமுக தொடர்ந்து தோல்வி பட்டியலிலேயே இருக்கிறது. அதனால் அவர்கள் அடுத்த தோல்வியை பற்றி கவலைப்படவில்லை. அதிலும் தற்போது பா.ஜனதாவின் மாயவலையில சிக்கியுள்ளனர்.
இதனால் இனி அவங்க இதை விட்டு வர முடியாது. நாங்கள் எல்லாம் எதிர்பார்த்தது இந்த தடவையாவது எடப்பாடி பழனிசாமி நடுநிலையோடு நின்று கொண்டு தமிழ்நாட்டுக்கு வர இருக்கின்ற ஒரு ஆபத்தை தடுப்பதற்கு பட்டியல் திருத்தத்தை வேண்டாம் என்று சொல்லி இருப்பார் என்று நினைத்தோம். ஆனால் அதையும் அவர் கைதட்டி வரவேற்று இருக்கிறார்.
கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியை தி.மு.க.வால் விமர்சிக்க முடியவில்லை. அதனால்தான் பாஜக கூட்டணியை விமர்சிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக செய்த ஒவ்வொரு தவறுகளையும் மக்கள் மத்தியில கொண்டு சென்றுதான் சென்ற தேர்தல்ல திமுக வெற்றி பெற்றது.
பா.ஜனதா கூட்டணியை தமிழக மக்கள் விரும்பவில்லை. வாக்காளர் பட்டியல் திருத்தம் பல மாநிலங்களில் எப்படி நடத்தப்பட்டிருக்கிறது அதுதான் அவங்க வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது என்பது பட்டவர்த்தனமாக இன்னைக்கு பொதுமக்களுக்கு தெரிகின்ற நிலையில் ராகுல் காந்தி மிகத் தெளிவாக விளக்கமாக ஆதாரங்களோடு எடுத்து முன் வைத்துள்ளார். எனவே மோடி தார்மீகமாக அந்த பொறுப்பில் இருப்பதற்கு உரிமையை இழந்துள்ளார். அதனால் பா.ஜ.க. ஆட்சியை கலைச்சிக்கிட்டு மக்களை சந்திக்க தயாராகணும். வாக்காளர் பட்டியல் திருத்தத்தில்மாநில அரசினுடைய அதிகாரிகள் தான் பணியாற்றுகிறார்கள்.
எனினும் வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் கையில் உள்ளது. தேர்தல் கமிஷனுடைய நடுநிலை தன்மையே இன்னைக்கு கேள்வியில் இருக்கிறது. எனவே ஒரு தலைப்பட்சமான நியமனத்திற்கான வாய்ப்பு அங்க 100 சதவீதம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின் போது தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.



