தஞ்சாவூர், ஜூன் 7 –
தஞ்சாவூரில் உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி வடக்கு வாசல் மயானத்தில் புகையால் மாசடைந்த ராஜகோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் மேயர் மரக்கன்றுகள் நட்டனர். தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான சுடுகாடு. இது வடக்கு வாசல் பகுதியில் உள்ள ராஜா கோரி சுடுகாடு, மாநகரில் இறந்தவர்களின் உடல்களை அதிக அளவில் அடக்கம் மற்றும் தகனம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான இடமாகும். இது தஞ்சாவூர் மராட்டிய மன்னர் குடும்பத்திற்கான மயானமாகவும் விளங்கியது. இங்கு மன்னர்கள் ராணிகள் மட்டும் பிற இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்பட்டன. இந்த சுடுகாடு மாநகராட்சி மூலமாக பராமரிக்கப்படுகிறது. அதிக பரப்பளவைக் கொண்ட அந்தச் சுடுகாடு கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டன. இந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. தஞ்சாவூர் மாநகரில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்படும் போது அப்பகுதியில் எப்போதும் புகைமூட்டமாகவும், சுவாசிக்க சிரமப்படும் அளவில் மாசு நிறைந்த பகுதியாக காணப்படும். அந்த நிலையை மாற்றிடவும் இறுதிச் சடங்கு செய்திட வருவோர் நல்ல காற்றைப் பெறவும் திட்டமிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் புகையால் மாசடைந்த சுடுகாட்டை மாசற்ற சோலையாக உருவாக்கிட உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நட முடிவு செய்யப்பட்டன. அதன்படி மேயர் சண். ராமநாதன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் முன்னிலையில் ராஜா கோரி சுடுகாட்டில் புங்கை, வேம்பு உள்ளிட்ட ஆக்ஸிஜனை அதிகம் தரும் 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி ,எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகரன் ,டி கே ஜி நீலமேகம் ஆகியோர் நட்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள்,கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.