நாகர்கோவில், பிப். 20 –
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உலக தாய்மொழி நாளினையொட்டி ஆட்சியர் அலுவலக முகப்பில் இன்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் உலக தாய்மொழி நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த உறுதிமொழியில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டுவர பாடுபடுவோம். தேன் மதுர தமிழோசை உலககெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பம் இடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று இந்நாளில் உளமாற உறுதி ஏற்போம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பத்ம பிரியா, உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியம், தாஜ் நிஷா, வட்டாட்சியர் கோலப்பன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) வினோத், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



