கிருஷ்ணகிரி, ஜூலை 08 –
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து குறைகளை தீர்க்கும் பணிகள் துவங்கப்படும் என அறிவித்திருந்தார். முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் ஜீலை 15-ம் தேதி முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறைகளின் சேவைகள்/ திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் நகர் பகுதிகளில் 55 முகாம்களும் ஊரக பகுதிகளில் 173 முகாம்களும் ஆக மொத்தம் 228 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக வரும் முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை ஓசூர் மாநகராட்சியில் 10 முகாம்களும் கிருஷ்ணகிரி நகராட்சியில் 5 முகாம்களும் பர்கூர் மற்றும் நாகோஜனஹள்ளி பேரூராட்சிகளில் தலா 2 முகாம்களும் 10 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த கிராம ஊராட்சிகளில் 59 முகாம்களும் ஆக மொத்தம் 78 முகாம்கள் நடைபெற உள்ளன.
இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் ஜீலை 7-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள்/ சேவைகள் குறித்து விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.
மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி 07.07.2025 முதல் தொடங்கி இப்பணி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நடைபெறும். இப்பணிக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 2200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ச. தினேஷ் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.