ஈரோடு, ஆக. 25 –
இந்திய கட்டுமான நிறுவன கூட்டமைப்பான ஈரோடு கிரடாய் அமைப்பின் சார்பில் ஈரோடு பெருந்துறை ரோடு திண்டலில் உள்ள டர்மரிக் ஓட்டலில் வீடு, வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் ரியல் எஸ்டேட் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. இதன் திறப்பு விழாவுக்கு மாநில இணை செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஹபீப் முன்னிலை வகித்தார். வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி இதில் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார். இதன் பிறகு குத்து விளக்கு ஏற்றிய அவர் கண்காட்சியில் அமைக்கப்பட்டு உள்ள அரங்குகளை பார்வையிட்டார். இதில் கே.இ. பிரகாஷ் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஈரோடு, கோவையின் முன்னணி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களின் 32 அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் பார்வையாளர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசு அளிக்கப்படுகிறது. மேலும் வீடு வாங்குபவர்களுக்கு கடன் மற்றும் நிதி ஆலோசனையும் வழங்கப்படுகிறது. வீடுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகையும் அளிக்கப்படுகிறது. இதில் பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் ஹரிதா பூர்ணிமா, மாவட்ட செயலாளர் மாணிக்கம், பொருளாளர் ராஜன், இணை செயலாளர் ஜெயபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இதையொட்டி ‘கிரடாய்’ அமைப்பின் சார்பில் அட்சயம் டிரஸ்டுக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இதன் பிறகு கிரடாய் அமைப்பின் சார்பில் அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்க தற்போது அரசால் நிர்ணயிக்கப்பட்ட உள்ள கட்டிட உயரம் 18.3 மீட்டர் என்பதை 21 மீட்டராக உயர்த்தி வழங்க வேண்டும். ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் ஈரோடு கிரடாய் சார்பில் மணி கூண்டு அமைக்கவும் அதில் கிரடாய் பெயரை பொறித்து கொள்ளவும் அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டிருந்தது.



