ஈரோடு, மே 26 –
ஈரோடு மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 411 ஏரி, குளங்களில் படிந்துள்ள 1,27,72,883 கன மீட்டர் அளவுள்ள வண்டல் மண், களிமண் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக இலவசமாக வெட்டி எடுத்துச் செல்ல ஈரோடு மாவட்ட சிறப்பு அரசிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றில் தற்பொழுது 361 நீர்நிலைகளில் 51,82,200 கனமீட்டர் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த மண்ணை வட்டாட்சியரின் அனுமதி பெற்று, அதிகபட்சமாக 30 நாட்களுக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இதன்படி, விவசாயிகள் தங்களின் நன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 75 கனமீட்டர் (அல்லது ஒரு ஹெக்டேருக்கு 185 கனமீட்டர்) வரையிலும், புன்செய் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 90 கனமீட்டர் (அல்லது ஒரு ஹெக்டேருக்கு 222 கனமீட்டர்) வரையிலும் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம். மேலும், பொதுமக்களின் சொந்தப் பயன்பாட்டிற்கு 30 கனமீட்டர் வரையிலும், மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்களின் தொழில் தேவைக்காக 60 கனமீட்டர் வரையிலும் களிமண்ணைக் கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படும்.
இந்த சலுகையைப் பெற விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது அவரது விவசாய நிலம், மண் எடுக்கப்படும் நீர்நிலை அமைந்துள்ள அதே வருவாய் வட்டத்திற்குள் இருக்க வேண்டும். விவசாயிகள் தங்களின் விண்ணப்பத்துடன் சிட்டா மற்றும் அடங்கல் நகல்களை இணைக்க வேண்டும். மண்பாண்டத் தொழிலாளர்கள் மண் எடுக்க விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட மண்பாண்டத் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சான்று அல்லது கிராம நிர்வாக அதிகாரியின் சான்றைச் சமர்ப்பிக்க வேண்டும்
மேலும் விபரங்களுக்கு சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


