கன்னியாகுமரி, ஜூன் 24 –
ஈரான் நாட்டின்மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் சூழலில் ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழில் செய்துகொண்டிருக்கும் இந்திய மீனவர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி உயிர் பயத்துடன் உள்ளனர். அவர்களை தனி விமானம் அனுப்பி நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் அவசர கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து மத்திய மாநில அரசுகளுக்கு அவர் விடுத்துள்ள அவசர கோரிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஈரான் நாட்டில் பெரும்பாலான இந்திய மீனவர்கள் குறிப்பாக தென் தமிழக மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் எந்த அடிப்படை வசதியும் இன்றி தங்கள் படகுகளையே இருப்பிடமாகக் கொண்டு தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். பரந்து விரிந்த கடற்பரப்பில் எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி வாழ்கின்றனர். சமீபத்தில் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது நடத்திய தாக்குதல் மூலம் போர் பதற்றம் ஏற்பட்டு எப்போது என்ன நடக்குமோ என்ற உயிர் அச்சத்தில் மீனவர்கள் தவிக்கின்றனர். ஈரானிலிருந்து காப்பாற்றுங்கள் என்று மீனவர்கள் எழுப்பும் அபயக்குரல் தினமும் எதிரொலிக்கிறது. அவர்களின் தரவுகளை சேகரித்து கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் தூதரகங்கள் வழியாக நடவடிக்கை எடுக்க பல்வேறு முயற்சிகளை செய்துகொண்டிருக்கிறோம். இந்த இக்கட்டான நிலையில் கரம் தாங்கி தூக்க வேண்டிய மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மாநில அரசும் போதுமான நடவடிக்கைகளில் இன்னும் இறங்கவில்லை.
கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் இருந்த போது அப்போதைய அதிமுக அரசும் திரு. தளவாய்சுந்தரம் அவர்களும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் பெரும் முயற்சி செய்து மத்திய அரசை முடுக்கிவிட்டு தனி விமானம் மூலம் மீனவர்களை மீட்டு வந்தனர். அதைவிட மோசமான பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்திய மற்றும் ஈரான் தூதரகங்கள் மூலம் தனிவிமானங்களில் மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்து வீடு சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இந்த அவசர கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம் என்று குறும்பனை பெர்லின் தனது கோரிக்கையில் கூறியுள்ளார்.