நாகர்கோவில் நவ 2
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள நாகராஜா கோயில் திடல் மிக முக்கியமானது. ஆரம்ப காலத்தில் நீராதாரமாக இருந்த இந்தப் பகுதியே இப்போது திடலாக உள்ளது. 1956 ஆம் ஆண்டு குமரிமாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைந்த பின்பு இந்தத் திடலானது, நாகர்கோவில் நகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது. இப்போதும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் தான் இந்தத் திடல் உள்ளது.
அரசியல் கட்சியினரின் கூட்டம் தொடங்கி, கண்காட்சி, சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளும் இங்கு நடத்தப்படுவது வழக்கம். அப்போது திடலுக்கான வாடகைக் கட்டணம் மாநகராட்சி வசம் செலுத்தப்படும். அதேநேரத்தில் இந்தத் திடல் நாகராஜா கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் இன்றி சேவை செய்து வந்தது. தமிழகத்திலேயே நாக வழிபாட்டிற்கு தனி ஆலயம் உள்ள ஒரே கோயில் என்பதால் தினமும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அதில் காரிலும், சுற்றுலா வாகனங்களிலும் வரும் வெளியூர் பக்தர்களும், டூவீலரில் வரும் உள்ளூர் பக்தர்களும் மிக அதிகம்.
அவர்கள் தங்களது வாகனங்களை நாகராஜா கோயில் திடலில் கட்டணமின்றி நிறுத்தி வந்தனர். இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியின் சார்பில் இந்தத் திடலை கட்டண பார்க்கிங் தளமாக மாற்ற முயற்சிக்கும் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இதற்காக இம்மாதம் 7 ஆம் தேதி, ஏலத்திற்கும் நாள் குறிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதன் மூலம் கட்டணமின்றி வாகனம் பார்க்கிங் செய்யும் சலுகையை இழக்கும் அபாயம் ஏற்படும். இதேபோல் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நாகர்கோவிலில் வாகனங்களை திருப்பவோ, பார்க்கிங் செய்யவோ இந்த இடத்தை பயன்படுத்தி வந்த வாகன ஓட்டிகளுக்கும் கட்டண பார்க்கிங் என்பது கூடுதல் சுமையைத் தரும். இதையெல்லாம் கருத்தில்கொண்டு கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் நாகராஜா கோயில் திடலை பார்க்கிங் தளமாக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



