தூத்துக்குடி, செப்டம்பர் 08 –
கல்விப்பணியில் புதுமைகளைப் புகுத்தி சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் சென்னை தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து ஆசிரியர் செம்மல் விருதினை கடந்த 23 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. பல்வேறு கட்ட தேர்விற்கு பின் 109 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று வழங்கப்படும் விருதினை இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டம் இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் மு.க. இப்ராஹிம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக ஆசிரியர்கள் அனைவருக்கும் சால்வை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக மேள தாளத்துடன் அழைத்து வரப்பட்டனர். சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடைபெற்ற விழாவிற்கு வல்லுநர் தமிழகக்கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனர் முனைவர் வஜ்ரவேலு வரவேற்புரை நிகழ்த்தினர். செயல் இயக்குநர் முருகையன் பக்கிரிசாமி நோக்கவுரையாற்றினார். நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் பெரியண்ணன் தலைமையுரையும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கலைமாமணி சேவைச் செம்மல் முரளி வாழ்த்துரை வழங்கினார். வழி காட்டிய தலைசிறந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் செம்மல் விருதுகளை சென்னை தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின்
துணை வேந்தர் மூத்த பேராசிரியர் டாக்டர் எஸ். ஆறுமுகம் வழங்கினார்.
இவ்விழாவிற்கு தமிழ்நாட்டைச் சார்ந்த ஆசிரியர்கள் மட்டுமல்லாது சிங்கப்பூரில் பணியாற்றும் ஆசிரியர்களும் விருதினைப் பெற வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. விழாவில் முனைவர் கமலா முருகன், முனைவர் பார்வதி, முனைவர் ரமா மற்றும் கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முனைவர் கோவி.பழனி நன்றியுரையாற்றினார்.



