இரணியல், அக். 13 –
திங்கள்சந்தை அடுத்த பட்டரிவிளை பகுதியை சேர்ந்தவர் பவுல் ஜார்ஜ் (61) மீன் வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மனைவி சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டிலும், மகன் நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் மனைவி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பவுல் ஜார்ஜ் மகன் பென்சோ ஜெனோ என்பவர் பட்டரிவிளையில் வீட்டுக்கு வந்து தந்தையை பார்த்துவிட்டு மீண்டும் சென்று விட்டார்.
நேற்று காலையில் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டிய நிலையில் கிடந்தது. கதவை தட்டியும் திறக்காததால் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பவுல் ஜார்ஜ் பாத்ரூமில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை பார்த்தபோது பவுல் ஜார்ஜ் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடம் வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தியதில் பவுல் ஜார்ஜ் பாத்ரூம் செல்ல முயன்ற போது வழுக்கி விழுந்து இறந்து இருப்பதாக தெரிய வருகிறது. தலை, மூக்கு உள்ளிட்ட இடங்களில் பலத்த காய ஏற்பட்டிருந்ததும் தெரிந்தது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


