புதுக்கடை, ஜூன் 23 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட 18-ம் அன்பியத்தை சேர்ந்தவர் லேனடிமை (48). கடந்த 1 -ம் தேதி மாலை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற அவர் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடலுக்குள் தவறி விழுந்து மாயமானார். பின்னர் கடந்த 4 தேதி தேங்காப்பட்டணம் கடலில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது. இதனால் இவரின் வருமானத்தை நம்பி இருந்த இவரது மனைவி மேரி ஷகிலா, இரண்டு குழந்தைகளும் எவ்வித வருமானமும் இல்லாமலும் குழந்தைகளின் கல்விக்கும் எந்தவித வசதியும் இன்றி அவதிப்படுகிறார்கள் என்ற தகவலின் பேரில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும் தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலமும் நிதி வழங்கி உதவ வேண்டும் என்று ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கினார். இதன் காரணமாக மீனவர் லேனடிமை குடும்பத்திற்கு தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலம் 2 லட்சம் நிவாரணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து மீனவர் நலவாரியம் மூலம் வழங்கப்படும் 2 லட்சம் காசோலை மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 25 ஆயிரம் நிதியுதவியையும் அவரது மனைவி மேரி ஷகிலாவிடம் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜித் ஸ்டாலின், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்டாலின், மகிளா காங்கிரஸ் தலைவர் ஷீபா, இனயம் பங்கு பணியாளர் பபியன்ஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.