திருப்பூர், ஜூன் 28 –
குமரானந்தபுரத்தில் இந்து முன்னணியின் வடக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர், நிதி நிறுவனம் அதிபருமான பாலமுருகன் ஜூன் 26 அதிகாலை வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை தொடர்பாக வடக்கு காவல் நிலைய போலீசார் மூன்று தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். அவரது உடல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வரும் சூழலில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அதில் ஒருவரை கைது செய்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு இந்து முன்னணியினர் 500-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். கொலை செய்யப்பட்ட பால முருகன் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் மட்டுமே ஆகி உள்ளது. கணவனை இழந்து மனைவி கண்ணீர் மல்க சாலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார். இந்த மறியல் போராட்டம் காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யப்பட வேண்டும் இல்லையெனில் பாலமுருகனின் உடலை வாங்க மாட்டோம் என கூறி உறவினர்கள், இந்து முன்னணியினர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் திரண்டு இருப்பதால் பரபரப்பான சூழல் நிலவியது.



