ராக்கியாபாளையம், ஆகஸ்ட் 11 –
அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கம் தமிழ்நாடு வடக்கு மண்டலத்தின் 2-வது மாநாடு திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 26 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கலந்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் காவல்துறையின் சந்தேகத் தகவல் மட்டும் கொண்டு வாடிக்கையாளர் வங்கி கணக்குகளை முடக்கும் நடைமுறையை தடை செய்யப்பட வேண்டும் என்றும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படாத நிலையில் வங்கி கணக்கு முடக்கப்படக்கூடாது என்றும் இந்திய ரிசர்வ் வங்கி சார்பாக ஆக்கப்பூர்வ நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். மேலும் முகநூல், இன்ஸ்டாகிராம், இமோ, டெலிகிராம், கிரிப்டோ போன்ற செயலிகள் வழியாக சைபர் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் ஸ்பெஷல் சைபர் சர்விலன்ஸ் டாஸ்க் போர்ஸ் உடனடியாக மாவட்ட அளவில் அமைக்கப்பட வேண்டும்.
வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கு முடக்கப்பட்ட பிறகு உரிய ஆதாரங்களை சமர்ப்பித்தால் அதற்கான விசாரணை உடனடியாக நடத்தப்பட்டு கணக்கு மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் முடக்கப்பட்ட பணம் வாடிக்கையாளர்களுக்கு திரும்பி வழங்க காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் திரும்ப செலுத்த காலதாமதம் ஏற்பட்டால் வழக்குகளுக்கு உண்டான செலவு கட்டணம் , மன உளைச்சல் போன்றவைகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மாநில மற்றும் மத்திய அரசு சட்டமன்ற நீதி அமைச்சகம் ஆகியவை வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
வழக்கறிஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் மற்றும் மிரட்டல்கள் கடுமையான குற்றமாக கருத வேண்டும் என்றும் ஆபத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் போதுமான எண்ணிக்கையில் கூடுதல் கழிப்பறைகளை கட்ட வேண்டும். அவற்றை நாள் முழுவதும் பராமரிக்க முழு நேர துப்புரவு பணியாளரை நியமிக்க வேண்டும். கழிப்பறைகளுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் தண்ணீர் வசதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற கூடுதல் சொலிசிட்டர் வழக்கறிஞர் சுந்தரேசன், ஏபிஏபி அமைப்பின் தேசிய துணை தலைவர் ராஜேந்திரன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் பழனி குமார், அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் சேதுராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



