தஞ்சாவூர், ஜூன் 3 –
ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகு கலை, சிகை அலங்கார பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்கார போன்ற பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 3 இலட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள். திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. தகுதி பெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.
பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்த நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப காலமாத ஊதியமாக ரூபாய் 15 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான www.tahaco.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.
இதேபோல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து, இயல் உடல் எடை சீரமைப்பு போன்ற பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சிக்கான கால அளவு 50 நாட்கள் ஆகும். இந்த பயிற்சி ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விரும்புவர்கள் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



