மார்த்தாண்டம், மே 18 –
அருமனை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் மேரி. இவர் அருமனை பேரூராட்சியின் 9வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக உள்ளார். தற்போது மேரி வீட்டின் முன் பகுதியில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மேரி வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை கவுன்சிலர் வீட்டு முன்பு விரிவாக்க பணி நடைபெறும் இடத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். மேல் பனியனுடன், அரைகுறை ஆரையுடன் உடல் கிடந்தது. மேலும் அவரது வேட்டி கல்லில் கட்டப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் அருமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலா தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் அந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பது தெரிய வந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இதற்கு இடையே நேற்று மாலை ஆட்டோவில் வந்த இரண்டு பேர் கவுன்சிலர் வீட்டு முன்பு அந்த நபரை இறக்கிவிட்டு சென்றதாக தெரிய வருகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் எப்படி இறந்தார்? மது குடித்து போதையில் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஆட்டோவில் அவரை கொண்டு வந்தவர்கள் யார்? என்பது தொடர்பாகவும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



