நாகர்கோவில், செப். 6 –
குமரி மாவட்டத்தில் தற்போது 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சுங்கான் கடை பகுதியில் சாலை அமைத்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் பாசன கால்வாயை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் இப்பகுதி நெல் விவசாயத்திற்கு தண்ணீர் வரவில்லை. மேலும், நீர்வளத்துறைக்கு சொந்தமான இந்த கால்வாயில் இருந்த 4 ஷட்டர்களை மொத்தமாக திருடி எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக வருகின்ற கொஞ்சம் தண்ணீரையும் பாசனத்திற்கு முறையாக விநியோகிக்க இயலவில்லை.
மேலும் இந்த கால்வாயை சுருக்கியதன் காரணமாக சுங்கான்கடை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகில் இருக்கும் பனங்குளம் மற்றும் அக்கினியாகுளத்திற்கு தண்ணீர் வராமல் இந்த இரண்டு புரவிலும் நெற்பயிர் கருகி வருகிறது. 6 மாதங்களுக்கு முன்பு இதேபோன்று இந்த பாசன கால்வாயை சுருக்கிய போது பாசனத்துறை நிர்வாகிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் பிரச்சனை ஏற்படுத்தியதால் தற்காலிகமாக அப்போது தண்ணீர் தோண்டி விடப்பட்டது. தற்போது மீண்டும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கால்வாயின் குறுக்கே கல்வெர்ட் மற்றும் தடுப்புச்சுவர் கட்டி தண்ணீர் செல்லவே முடியாத அளவிற்கு பணிகள் செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி விவசாய பிரதிநிதிகள் பிரச்சனையை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர்.
இன்று பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ மற்றும் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வல்சன் போஸ், உதவி பொறியாளர் ரமேஷ் ராஜன் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் இப்பகுதிக்கு வந்து அந்த பணியை தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளும் நிறுவன பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான 4 வழிச்சாலை பணியை மேற்கொண்டு வரும் பணியாளர்களும் அங்கு வந்தனர்.
நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அருகில் இருந்த பாப்பனாங்ககுளத்தின் மடை பகுதியை தோண்டி தண்ணீர் செல்வதற்கு தற்காலிகமாக மட்டும் ஒரு வழி ஏற்படுத்தி உள்ளனர். சானலின் குறுக்கே போடப்பட்டுள்ள கான்கிரீட் சுவரை அகற்றுவது சம்பந்தமாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. தற்காலிகமாக கரைப்பகுதி தோண்டி விடப்பட்டுள்ளதால் தண்ணீர் வரும்போது உயரமான அந்த குளத்தினுடைய கரைப்பகுதி உடைந்து சானலுக்குள் விழுவதோடு மீண்டும் தண்ணீர் செல்லாது. ஆகவே ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சினை ஏற்படுவதை தடுக்க நிரந்தரமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கால்வாயை ஏற்கனவே எப்படி இருந்ததோ அப்படி சிமெண்ட் மூலம் கட்டி ஷட்டர்களையும் அமைத்து தந்து சானலின் குறுக்கே உள்ள புதிய கான்கிரீட் சுவரை அகற்றி புதிய கல்வெர்டுக்குள் தண்ணீர் செல்வதற்கு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேபோன்று மாவட்டம் முழுவதும் பல்வேறு பாசன கால்வாய்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூடிக்கொண்டு இருப்பதால் இந்த புதிய நான்கு வழிச்சாலையின் ஒரு புறம் தண்ணீர் தேங்கி சதுப்பு நிலமாக மாறுவதோடு கீழ் பகுதி மொத்தமாக தண்ணீர் கிடைக்காமல் வறண்டு பாலைவனமாக மாறிவிடும். மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக் கொண்டார்கள்.



