ராஜாக்கமங்கலம், செப்.12:
வெள்ளிச்சந்தை அருகே சரல் உன்னங்குளத்தைச் சேர்ந்த வைகுண்ட மணியின் மனைவி நேசம் (72). இவரது மகள் சுபா (50). இருவரும் அப்பகுதி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து தாய்-மகள் இருவரும் சேனாப்பள்ளி சாலையில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மோதியது. இதில் நேசம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சுபாவுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், காரை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடினார். தகவலறிந்து விரைந்து வந்த வெள்ளிச்சந்தை போலீசார், படுகாயமடைந்த சுபாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே உயிரிழந்த நேசத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நேசத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுநர் விட்டுச் சென்ற காரை போலீசார் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். காரின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஓட்டுநர் குறித்து விசாரணை நடத்தி, அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.



