தருமபுரி, ஏப்ரல் 24 –
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், தருமபுரி, அரூர் (தனி) ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 6,29,980 ஆண் வாக்காளர்கள், 6,21,887 பெண் வாக்காளர்கள், 152 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 12,52,019 வாக்காளர்கள் உள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 957 மையங்களில் 1,596 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் இரவு 8:00 மணி நிலவரப்படி 90.14 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.


