விளாத்திகுளம், ஆகஸ்ட் 06 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பைரவசாமி திருக்கோவிலில் ஆடிக் கொடை விழா
வெகுவிமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி, காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள், ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பசாமி, விநாயகரின் முழு உருவத்தை தத்ரூபமாக பிரதிபலிக்கும் வகையில் முளைப்பாரி வளர்த்திருந்தனர். பக்தர்களின் பக்தி, அர்ப்பணிப்பு மற்றும் நேர்த்திக்கடனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த முழு உருவ முளைப்பாரி, பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றதையடுத்து, முளைப்பாரி ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலம் மதுரை ரோடு,எட்டயபுரம் ரோடு,மார்க்கெட் ரோடு, விளாத்திகுளம் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, இறுதியாக ஆற்றுப்பாலம் பகுதியில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின் போது வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று முழு உருவ முளைப்பாரியை தரிசித்து வழிபட்டனர்.
இந்த ஆடிக் கொடை விழாவில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



