களியக்காவிளை, செப். 11 –
கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் பகுதியில் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் மற்றும் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வின்சென்ட் தலைமை வகித்தார். அமைப்பின் நிர்வாகிகள் ஹென்றி, அனூப், விஜயேந்திரன், வினோத், சுரேஷ், வின்சென்ட் ராஜ், மோகன்குமார், மதன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் போராட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலர் போராட்டத்தை விளக்கிப் பேசினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் சேகர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பளுகல் பகுதியில் செயல்பட்டு வந்த கலப்பட தேங்காய் எண்ணெய் ஆலையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்த நிலையில் தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் மீது உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தப்பட்டது.



