நாகர்கோவில், மே 7 –
வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ஏற்படுத்திய ஒன்றிய பாஜக அரசின் செயல்பாட்டை கண்டித்து குமரி மாவட்ட இடதுசாரிகள் மற்றும் விசிகவினர் நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி எம்.எல்.ஏ தலைமை வகித்தார். சி பி ஐ மாவட்ட செயலாளர் டி.சுபாஷ் சந்திர போஸ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், விசிக மண்டல செயலாளர் பா.பகலவன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர் செல்ல சுவாமி பேசியதாவது: ஒன்றிய பாஜக அரசானது, வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.1000 வரையிலும், 5 கிலோ சிலிண்டருக்கான விலையை 201 ரூபாயும் உயர்த்தியுள்ளது. கடந்த 120 நாட்களில் 1,518 ரூபாய் உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று 1,739 ரூபாயாக இருந்த ஒரு சிலிண்டரின் விலை தற்போது 3,257 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் கடுமையான சுமையாகும்.
ஏற்கெனவே, அந்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையின்மை மற்றும் வருவானப் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது வணிக சமையல் எரிவாயு விலையை உயர்த்தியிருப்பது அப்பட்டமான கொள்ளையாகும். எனவே, அநியாயமான வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.அந்தோணி, எம்.அண்ணாதுரை, என்.எஸ்.கண்ணன், என்.ரெஜீஸ்குமார், ஆர்.ரவி, எஸ்.ஆர்.சேகர், ஏ.நீலாம்பரன், நாகர்கோவில் மாநகர செயலாளர் எஸ்.அருணாசலம், விடுதலை சிறுத்தைகள் மண்டல செயலாளர் பகலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



