நாகர்கோவில், ஜூன் 11 –
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்குப் பேயங்குழி இரட்டைக்கரை கால்வாயினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்: விவசாயப் பணிகளுக்கு தடையின்றித் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வடக்குப் பேயங்குழி கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இரட்டைக்கரை கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கால்வாயில் தண்ணீர் தங்குதடையின்றிச் சென்று கொண்டிருப்பதை நேரில் பார்வையிட்டதோடு, தூர்வாரப்பட்டதன் மூலம் நீரோட்டம் சீராக உள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கால்வாயில் திறந்து விடப்படும் நீரானது, எவ்விதத் தடையுமின்றி பாசனப் பரப்பின் கடைமடைப் பகுதி வரை முழுமையாகச் சென்றடைவதை அலுவலர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். நீர்வழிப் பாதையில் எங்கும் அடைப்புகளோ அல்லது ஆக்கிரமிப்புகளோ ஏற்படாத வண்ணம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கலெக்டர் கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் கதிரவன், உதவிப் பொறியாளர், துறை அலுவலர்கள் உட்பட பலர் உள்ளார்கள்.



