சென்னை: செப்.08.
சர்க்காரியா கமிஷன் குறித்து முதல்வர் விஜய் பேசியது ரீல்ஸ் போடுவதற்காகவே என திமுக கொறடா எ.வ.வேலு விமர்சித்தார். மேலும், சபாநாயகர் முன்பு நடுநிலையாக இருந்த நிலையில், தற்போது சர்வாதிகார போக்கை கடைப்பிடிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய சர்க்காரியா கமிஷன், மிசா மற்றும் அமலாக்கத்துறை தொடர்பான கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவற்றை நீக்கத் தேவையில்லை என சபாநாயகர் தெரிவித்ததைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவைக்காவலர்கள் மூலம் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, சர்க்காரியா கமிஷனில் முன்வைக்கப்பட்ட 28 குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரம் இல்லை என்பதால் அவை முடித்து வைக்கப்பட்டதாக கூறினார். மேலும், மிசா காலத்தில் ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகளை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் விஜய் பேசியதாகவும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் பேசுவது விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
“நாங்கள் ரியல் ஆட்சி நடத்தினோம்; இப்போது ரீல்ஸ் ஆட்சி நடத்துகிறார்கள்” என விமர்சித்த எ.வ.வேலு, முதல்வரின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்காத சபாநாயகரின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.



