மார்த்தாண்டம், ஆக. 12 –
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து குழித்துறையில் காங். நிர்வாகிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100பேர் கைது செய்யப்பட்டனர். காங். தலைவர் ராகுல் காந்தியை கைது செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குழித்துறை சந்திப்பில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன் கிறிஷ்டல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் பினுலால் சிங் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் திடீரென களியக்காவிளை – நாகர்கோவில் தேசிய சாலையில் அமர்ந்து இருந்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையில் இரண்டு பக்கங்களிலும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது இதனால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த களியக்காவிளை போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் கைதாக மறுத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் அரை மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில் அவ்வழியாக தீயணைப்பு துறை வாகனம் ஒன்று ஒலி எழுப்பியவாறு வந்தது.
இதை அடுத்து போராட்டக்காரர்கள் அப்பகுதியை விட்டு எழுந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்திய போலீசார் போராட்டகாரர்ளை அமர விடாமல் தடுத்தனர். பின்னர் போராட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்று அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைதானார்கள்.
இதனால் அரை மணி நேரம் நடைபெற்ற மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தில் ஜவாகர் பால் மஞ் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ், மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி லைலா ரவி சங்கர், டாக்டர் தம்பி விஜயகுமார், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், திருவட்டார் வட்டாரத் தலைவர் ஜெபா, நல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்
நிர்மல் ராவண்டிஸ், லீபன் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.



