நாகர்கோவில், நவ. 10 –
குளச்சல் அருகே வானியக்குடியை சேர்ந்தவர் ஆன்டனி (50). இவர் கொல்லம் பகுதியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை ஆண்டனி கேரளா மாநிலம் கொல்லத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டார். புனலூரில் இருந்து மதுரை வந்த பயணிகள் ரயிலில் அவர் பயணம் செய்தார். ரயிலில் இரவு 10 மணிக்கு இரணியல் ரயில் நிலையத்தை வந்ததும் ஆண்டனி ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்ற பிறகுதான் கொண்டு வந்த பேக்கை ரயிலில் இருந்து எடுக்காததை உணர்ந்தார்.
உடனே அவர் இரணியல் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த ரயில் நிலைய அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்தார். தவறவிட்ட பேக்கில் ரூ. 2 லட்சத்தறு 82 ஆயிரத்து 500 இருப்பதாகவும் கூறினார். உடனே ரயில்வே அதிகாரிகள் நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரயில் வள்ளியூர் அருகே சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து வள்ளியூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த பேகை மீட்க கூறினார்கள். ஆனால் ரயில் அதற்குள் புறப்பட்டு சென்று விட்டது.
இதைத்தொடர்ந்து நாங்குநேரியில் உள்ள ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் நாங்குநேரி சென்ற பின் பேக்கை மீட்டனர். பின்னர் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசும் ஆன்டனியிடம் ஒப்படைத்தனர். சோதனை செய்தபோது அதில் பணம் அப்படியே இருந்தது. போலீசார் அந்த பணத்தை ஒப்படைத்தனர்.
இது குறித்த ஆண்டனி கூறுகையில்: கொல்லத்தில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து விட்டு ஊருக்கு வருவதாகவும் தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்கள் வீட்டிற்கு பணம் கொடுப்பதற்காக தன்னிடம் பணம் கொடுத்து விட்டதாகவும், ரயில் நிலையத்தை விட்டு இறங்கும் போது பேக்கை ரயிலில் தவற விட்டு இறங்கியதாகவும் கூறினார். பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கும் ரயில்வே அதிகாரிகளுக்கும் ஆண்டனி பாராட்டு தெரிவித்தார்.


