ஈரோடு, ஜூன் 19 –
ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் இந்திய மருத்துவம் ஓமியோபதி துறை, நந்தா இயற்கை யோகா மருத்துவக்கல்லூரி இணைந்து நடத்திய சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது: இன்றைய சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளில் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால் பலரும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தவிர்க்கவும், உடல் மற்றும் மனநலத்தைப் பேணிக்காக்கவும் யோகா ஒரு சிறந்த வழிமுறையாக விளங்குகிறது. மேலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றிய யோகா கலை. இன்று உலக நாடுகள் முழுவதும் பரவி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழங்கி வருகிறது. யோகா என்பது உடலை மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும் முழுமையான பயிற்சியாகும். இதன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் அனைத்து வயதினரும் தினசரி யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக கடைப்பிடிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியம், மன அமைதி, கவனக்குவிப்பு மற்றும் செயல்திறன் மேம்படும். ஆசிரியர்கள். மாணவர்கள். அரசு அலுவலர்கள். பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் யோகா பயிற்சியைள தொடர்ந்து மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்துவதில் யோகாவின் முக்கியத்துவம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் போராசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து பல்வேறு யோகாசனங்கள், மூச்சுப்பயிற்சிகள், ஆசனங்கள் மற்றும் தியானப் பயிற்சிகள் செய்முறை விளக்கத்துடன் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (நலப்பணிகள்) ஜெயந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் அருணா, மாவட்ட குழந்தை வளர்ச்சி அலுவலர் பூங்கோதை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் யசோதை, நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகன், கவுந்தபாடி, அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் (சித்தா), வெங்கடாசலம், முதல்வர் நந்தா இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரீவ்ஸ் ஜஸ்டிலிணட் தாஸ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



