ஈரோடு, செப்.02.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 46-புதூர், எலையம்பாளையம், அவல்பூந்துறை, வடுகப்பட்டி, எழுமாத்தூர் மற்றும் துய்யம்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 46-புதூர் ஊராட்சியில் ரூ.60.85 லட்சம் மதிப்பீட்டில் ஆணைக்கல்பாளையம் சுற்றுச்சாலை முதல் வெள்ளாளபாளையம் வரையிலும், ரூ.79.03 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளாளபாளையம் சாலை முதல் கொல்லம்பாளையம்–நஞ்சை ஊத்துக்குளி சாலை வரையிலும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்டார். சாலையின் நீளம், அகலம், தடிமன் மற்றும் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் கற்கள், மூலப்பொருட்களின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து எலையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தொடுதிரை வகுப்பறையை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தார். பள்ளியில் ரூ.8.21 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவுக் கூடத்தையும் ஆய்வு செய்தார். சத்துணவுக் கூடத்தில் தூய்மை, குடிநீர் வசதி, உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அவல்பூந்துறை பேரூராட்சிக்குட்பட்ட பாரதியார் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடத்தையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நடமாடும் மருத்துவமனையையும் ஆட்சியர் பார்வையிட்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவப் பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
வடுகப்பட்டி பேரூராட்சி பகுதியில் ரூ.5.39 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். பணிகளின் தற்போதைய முன்னேற்றம், காலக்கெடு மற்றும் கட்டுமானத் திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஆட்சியர், வளர்ச்சிப் பணிகளை உரிய தரத்துடன் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.



