மதுரை, ஜூலை 20 –
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், இந்திய குழந்தை மருத்துவ சங்கத்தின் (IAP) குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் புற்றுநோயியல் பிரிவின் 11-வது தொடர் மருத்துவக் கல்வி (CME) திட்டமான ‘மதுரம் 2026’ நிகழ்வை நடத்தியது. ஜூலை 17 முதல் 19 வரை மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில், குழந்தைகளுக்கான இரத்தவியல், புற்றுநோயியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை ஆகியவற்றில் சமீபத்திய நவீன முன்னேற்றங்கள் விளக்கப்பட்டன.
குழந்தை பருவ இரத்தக் கோளாறுகள் மற்றும் புற்றுநோய் துறையில் உலகளவில் புகழ்பெற்ற கிட்டத்தட்ட 100 தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பொது மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்கள், சிறப்பு நிபுணர்கள் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள் என சுமார் 500 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். குழந்தை நல மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் குடும்ப மருத்துவர்களுக்கு இத்துறையின் சமீபத்திய அறிவியல், தொழில்நுட்ப மற்றும் மருத்துவ முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணர்வை வழங்கும் நோக்கில் பிரத்யேக அமர்வுகளும் குழு விவாதங்களும் நடத்தப்பட்டன.
‘மதுரம் 2026’ மருத்துவக் கல்வி மாநாட்டை தமிழ்நாடு அரசின் மாண்புமிகு மின்சக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. R. நிர்மல் குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் S. குருசங்கர்; மதுரை மருத்துவக் கல்லூரியின் குழந்தைகள் நல பிரிவின் முன்னாள் இயக்குநரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான டாக்டர் பாலசங்கர்; IAP குழந்தைகளுக்கான இரத்த புற்றுநோயியல் பிரிவின் தலைவர் டாக்டர் சத்யா P. யாதவ் மற்றும் கௌரவச் செயலாளர் டாக்டர் ஸ்வேதா பன்சால்; மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர் B. கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவிற்கு முதுநிலை புணர் டாக்டர். காசி விஸ்வநாதன் தலைமை ஏற்க, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குழந்தைகளுக்கான இரத்த புற்றுநோயியல் துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் டாக்டர் அன்னபூரணி, டாக்டர் அனிதா மற்றும் டாக்டர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் இதன் முதன்மை உறுப்பினர்களாகச் செயல்பட்டனர்.
தொடக்க விழாவில் அமைச்சர் R. நிர்மல் குமார் பேசியதாவது: “இந்தியாவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. நமக்கிருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, பெரும்பாலான புற்றுநோய்கள் இன்னமும் மிகவும் முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகின்றன என்பதாகும். அந்த நிலையில் சிகிச்சை மிகவும் சிக்கலானதாக மாறுவதோடு, நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடுகின்றன. பல மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோயைக் கண்டறியும் முறையை நாம் இன்னும் பரவலாக்க வேண்டியுள்ளது. எனவே, நாம் புற்றுநோய் பரிசோதனை திட்டங்களை கணிசமாக வலுப்படுத்த வேண்டும்; பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளிலும் இந்த பரிசோதனைகள் எளிதாகக் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.”
மீனாட்சி மிஷன் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் S. குருசங்கர் தனது உரையில் குறிப்பிட்டதாவது: “ஒரு மருத்துவமனை என்பது அதன் பிரமாண்டமான கட்டிடங்கள் அல்லது அதிநவீன உள்கட்டமைப்புகளுக்காக அறியப்படலாம்; ஆனால் அதன் உண்மையான பலம் என்பது அங்கிருக்கும் மருத்துவர்களின் நிபுணத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் கனிவான மனிதநேயத்தில் தான் உள்ளது. ஏனெனில் அவர்கள் தான் சமூகத்திற்கு ஆரோக்கியத்தையும், நம்பிக்கையையும், வாழ்க்கையையும் மறுபடியும் வழங்குகிறார்கள்.



