மார்த்தாண்டம், பிப். 26 –
மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (51). அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். விஜயகுமாரின் தாய் பாலம்மாள் என்பவரை அதே பகுதியை சேர்ந்த மார்ட்டின் மகன் மார்ஷல் (22) என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருதரப்பினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று விஜயகுமார் டீக்கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த மார்ஷல் முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு விஜயகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்கி உள்ளார். பின்னர் கொலை மிரட்டல் வித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இந்த தாக்குதல் காயமடைந்த விஜயகுமாரை அங்கு இருந்தவர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் டீக்கடை காரரை தாக்கிய மார்ஷல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்ஷல் மீது ஏற்கனவே மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் உள்ளதும், தற்போது அவர் சட்டக் கல்லூரியில் 3 ம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்துள்ளது.


