மதுரை, ஆகஸ்ட் 18 –
மதுரை அரசு அச்சகம், தமிழ் காட்சிக்கூடம், காந்தி அருங்காட்சியகம் மற்றும் உலக தமிழ்ச்சங்கம் ஆகிய இடங்களில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் தலைமையில்
மாவட்ட விளையாட்டு மைதானம் சாலையில் அமைந்துள்ள அரசு அச்சகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் அச்சகத்தில் பணிபுரியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தற்போது அச்சகத்தில் அச்சிடப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு அச்சகத்தின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து காந்தி நினைவு அருங்காட்சியகம் எதிரில் அமைந்துள்ள தமிழ் காட்சிக்கூடத்தை பார்வையிட்டு அதிக பார்வையாளர்கள் வருகை தர ஏதுவாக அறிவிப்பு பலகைகள் வைக்கவும், தமிழ் காட்சிக்கூட வளாகத்தினை சுத்தமாக பராமரிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் தமிழ் காட்சிக்கூடத்தை பார்வையிடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களை அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஆய்வு செய்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். பொதுப்பணித்துறை புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பணிகள் குறித்து ஆய்வு செய்து புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் நிறைவடைந்த பின்பு புனரமைக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து உலக தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தென்மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் 2025-26 ஆம் கல்வியாண்டில் புதிய அரசு கைவினை கலைக் கல்லூரி தொடங்கப்பட்டு 40 மாணவர்கள் பயின்றிட ஏதுவாக நுழைவுத் தேர்வு நடத்தப் பெற்றுள்ளது. கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்திட உலகத் தமிழ்ச்சங்க அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் உலகத் தமிழ்ச்சங்கம் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரித்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன் மற்றும் உலகத் தமிழ் சங்கம் தனி அலுவலர் (பொ) முனைவர் அவ்வை அருள், உலகத் தமிழ் சங்க துணைத் தலைவர்/இயக்குநர் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



