குளச்சல், மார். 2 –
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடைவிழா கோவில் மேல்சாந்தி தலைமையில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
இந்த விழாவில் குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்தும் ஏரளாமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த மகா திருவிழாவைக் காணத் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர்.
முதலாம் நாளான நேற்று நடந்த கொடியேற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர் விக்டோரியா கெளரி, விஜய் வசந்த் எம்.பி, பிரின்ஸ் எம்எல்ஏ, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார், திருக்கோயில் இணை ஆணையர் ஜான்சிராணி, முன்னாள் அமைச்சர் பச்சைமால் உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தர்கள் பல்வேறு நேர்ச்சை வழிபாடுகள் நடத்த உள்ளனர். இந்த திருவிழாவின் பத்தாவது நாளான இந்த மாதம் 10ம் தேதி நள்ளிரவு இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஒடுக்கு பூஜை நடைபெற உள்ளது.



