நாகர்கோவில், ஆகஸ்ட் 11 –
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடந்த போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற மையக்கருத்தை வலியுறுத்தி மாநில அளவிலான பெருந்திரள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டார். நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கலை அரங்கில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் அழகுமீனா, எஸ்.பி ஸ்டாலின் பங்கேற்றனர்.
விழிப்புணர்வு உறுதி மொழியை மாணவ மாணவிகளுடன் ஏற்றுக் கொண்டு, கலெக்டர் பேசியதாவது: ‘போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் பொது இடங்களில் நடந்தது. ஒரு நாள் மட்டும் என்று போதை பொருட்களை உபயோகித்தால் அதற்குள் சிக்கிக் கொள்ளும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். எதிர்காலத்தை பாழாக்கக்கூடிய போதை பொருட்களை மாணவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. போதையில்லா குமரி மாவட்டத்தை உருவாக்கிட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், கல்வி அலுவலர்கள் இணைந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடைகள் முதல் முறை என்றால் உரிமம் ரத்து செய்யப்பட்டு 15 நாள் மூடி சீல் வைக்கப்படும். பின்னர் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஆசிரியர்கள் போதை பொருட்களின் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்றார். மேலும் போதை எதிர்ப்பு சார்ந்த சிறந்த 7 தன்னார்வ குழுக்களுக்கு 50 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கோப்பையை கலெக்டர் வழங்கினார்.
தமிழ்நாடு உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியன், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய் குமார் மீனா, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல் குமார், ஆர்டிஓ காளீஸ்வரி, முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.



