சென்னை, ஆகஸ்ட் 25 –
சென்னை பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 53-வது ஆண்டு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் அதிபர் அருளப்பா சின்ன வேளாங்கண்ணி என்று அழைக்கப்படுகிற பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 53-வது ஆண்டு திருவிழா ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. செப்டம்பர் 8-ம் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளோடு முடிவடைகிறது.
1972 ஆம் ஆண்டு மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திருத்தலம் இன்றைக்கு பல லட்சக்கணக்கான மக்கள் வழிபாட்டுத்தலமாக வளர்ந்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 29-ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு அன்னையின் திரு உருவம் தாங்கிய பன்னிரண்டு அடி நீளம் உள்ள திருக்கொடியானது பவனியாக கொண்டுவரப்பட்டு புனிதம் செய்யப்பட்ட பின் திருத்தளத்தில் அமைந்துள்ள 75 அடி உயரக் கொடி கம்பத்தில் சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களால் ஏற்றி வைக்கப்படும்.
செப்டம்பர் 7-ம் நாள் மாலை 5 மணிக்கு சென்னை மயிலை உயர் மறை மாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் உயர் மறை மாவட்ட குருக்களோடு இணைந்து கூட்டுத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் ஆடம்பரத் தேர்பவனியும் நடைபெறும். செப்டம்பர் 8ம் தேதி அன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படும். அன்று விடியற்காலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும். காலை 7.45 மணி ஆங்கிலத் திருப்பலி முடிவிலும் காலை 9.30 மணி தமிழ் திருப்பலிக்கு முன்பும் அன்னைக்கு முடிசூட்டுவிழா நடைபெறும். அன்று மாலை 5.30 மணி திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.



