புதுக்கடை, ஜூன் 29 –
புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பகுதி செந்தறை என்ற இடத்தை சேர்ந்தவர் குமார் மனைவி சுமிதா (39). இவரது அண்ணன் சுகின் (42). சுகினுக்கு காக்கா வலிப்பு நோய் உள்ளதால் திருமணமாகாமல் சுமிதா வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுகின் வீட்டு மாடியில் நின்றிருந்தார். அந்த நேரம் மீண்டும் வலிப்பு நோய் வந்துள்ளது. அப்போது வீட்டின் மாடியில் உள்ள இரும்பு சீட் அமைந்துள்ள இரும்பு பைப்பில் கட்டியிருந்த நைலான் கயிறு அவரது கழுத்தில் மாட்டி, கழுத்து இறுக்கி, தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
பின்னர் வீடு வந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை டாக்டர்கள் சுகின் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


