தருமபுரி, மே 9 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி ராஜாசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வந்த மினி சரக்கு லாரியை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் வாகனம் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மினிலாரியை துரத்தி சென்றனர். போலீசார் துரத்தி வருவதை அறிந்தவர்கள் மினி சரக்கு லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி சென்றனர்.
மினி சரக்கு லாரியை பறிமுதல் செய்து சோதனையிட்டபோது 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. குட்காவுடன், மினி சரக்கு லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.



