மார்த்தாண்டம், ஏப். 23 –
பத்மநாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட பேச்சிப்பாறை ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் மலை கிராமங்கள் பல உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பேச்சிப்பாறை அணையை கடந்து குலசேகரம் போன்ற நகர் பகுதிகளுக்கு வருவது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு தேர்தலுக்கும் பேச்சிபாறை அரசு பழங்குடியின உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு படகுகளில் கட்டண செலுத்தி வந்து வாக்களிப்பது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது நடக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவு என விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வாக்காளர் வசதிக்காக 3 படகுகளை இலவசமாக ஏற்பாடு செய்துள்ளனர். இந்த படகுகள் மூலம் அணைக்கு மறுபக்கத்தில் உள்ள தோட்டமலை, தச்சமலை, மாறாமலை, தலப்பாறை, நடனம் பொற்றை, சின்ன முட்டுதேரி உள்ளிட்ட பல மலை கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் படகில் பேச்சுப் பாறை அணை வந்தனர். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பேச்சிப்பாறை உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வாக்களித்தனர்.



