நாகர்கோவில், ஏப். 25 –
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த நாளிலிருந்து வாக்குப்பதிவு நாள் வரை எனக்காக களத்தில் கடும் உழைப்பை தந்து இயங்கிய அனைத்து மாநில, மண்டல, கிளை பொறுப்பாளர்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னார்வலர்களாக முன்வந்து பரப்புரைகளுக்கு உதவிய மக்களுக்கும், களத்திலும், பின்னணியிலும் உழைத்த நண்பர்களுக்கும், பொருளாதார உதவிகளை செய்த நல்லுள்ளங்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தன் கடுமையான உழைப்பால் நாம் சோர்வடையாமல் வலுவேற்றிய அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . உங்கள் அனைவரின் ஆதரவும் இனமுன்னோர்கள் மற்றும் மாவீரர்களின் அருளும் நம்மை வழிநடத்தியிருக்கிறது.
இந்த பரப்புரை பயணத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி முழுவதும் ஊர்கள் தோறும் தெருக்கள் தோறும் வீடுகள் தோறும் சென்றடைந்திருக்கிறோம். முடிந்தவரை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளையும் தமிழ்தேசிய அரசியலின் தேவையையும் மக்களுக்கு கடத்தியிருக்கிறோம். நமது கூட்டு உழைப்பும் தமிழ்தேசிய அரசியலின்மீதான பற்றுறுதியுமே இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
சட்டமன்ற தேர்தலுக்கான நமது வேலைகள் மட்டுமே நிறைவடைந்திருக்கிறது. வழக்கம்போல் களப்பணிகள் நமக்காக காத்திருக்கிறது. தொடர்ந்து இயங்குவோம். இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என அவர் கூறியிருந்தார்.



