நாகர்கோவில், ஜூன் 30 –
நாகர்கோவில் நான்குவழி சாலையில் சென்டர் மீடியனில் பைக் மோதி 2 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் நடந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நாகர்கோவில் பறக்கை ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது அப்துல் காதர். இவரது மகன் ரெயான் முகமது (20). இவரது நண்பர் முகமது ஷபான் சிராஜ் (20). இவர் வடக்கு சூரங்குடியை சேர்ந்தவர்.
இவர்கள் 2 பேரும் நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் காவல்கிணறு சென்று விட்டு பைக்கில் நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தனர். நாகர்கோவில் – அப்டா மார்க்கெட் இடையிலான நான்கு வழிச்சாலையில் திருப்பதிசாரம் டோல்கேட் கடந்து பைக் வந்து கொண்டிருந்தது. அப்போது திருப்பதிசாரம் வளைவில் வரும் போது திடீரென பைக் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்டர் மீடியனில் மோதியது.
இதில் பைக்கில் இருந்த ரயான் முகமது மற்றும் முகமது ஷபான் சிராஜ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இரண்டு பேரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இருவரும் இறந்ததாக டாக்டர்கள் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதை அடுத்து அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் இறந்த தகவல் அறிந்ததும் குடும்பத்தினரும் மருத்துவமனையில் திரண்டனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்தால் அப்டா மார்க்கெட் – திருப்பதிசாரம் டோல்கேட் இடையே நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



