நாகர்கோவில், ஏப். 27 –
நாகர்கோவில் வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (36). இவர் கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 24ஆம் தேதி கவியரசன் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் உள்ள கட்டண பார்க்கிங் பகுதியில் தனது பைக்கை பார்க்கிங் செய்து விட்டு சென்றுள்ளார். பின்னர் மாலையில் பணி முடித்து பைக்கை எடுக்க வந்தபோது அவரது பைக்கை காணவில்லை.
இது குறித்து பார்க்கிங் பணியாளரிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கவியரசன் வடசேரி போலீஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபரால் பைக் திருடப்பட்டதும், தனது வாகனத்தை மீட்டு தர வேண்டும் எனவும், கட்டண பார்க்கிங் பொறுப்பாளர் தகுந்த பதில் அளிக்கவில்லை எனும் புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் வடசேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் விசாரணை நடத்தி பைக் திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் டவுன் ரயில் நிலையங்களில் கட்டண வாகன பார்க்கிங் உள்ளது. இந்த பார்க்கிங்கில் போதிய மேற்கூரை வசதிகள் இல்லை. பைக்குகள் பாதுகாப்பில்லாமல் வெயிலில், மழை நேரங்களில் சேதம் அடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கட்டணம் அதிகமாக வசூலித்தம் கூட பார்க்கிங் மேற்கூரைகள் உள்ளிட்டவை முறையாக அமைக்காதது பயணிகளை பெரும் கவலை அடைய செய்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரியிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந்த ரயில்வே பார்க்கிங் முறையாக அடையாள எண் அடிப்படையில் இயங்கக் கூடியது. அப்படி இருக்கையில் எப்படி இந்த பைக் திருடப்பட்டது என்பது குறித்து ரயில்வே நிர்வாகமும் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


