நாகர்கோவில், அக்டோபர் 11 –
காவல் துறையினருக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் பணிக்கு சேர்ந்ததும் அவர்களுக்கு பல்வேறு வித பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் முடி வெட்டுவதில் தொடங்கி ஷூ பாலிசாக இருப்பது வரை அவர்கள் ஒழுக்கம் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இதற்கான பரேடு பயிற்சி என்பதும் காவல்துறையில் மிகவும் முக்கியமாகும். இந்த பயிற்சியில் அவர்களுக்கு எல்லா விதமான ஒழுக்க நெறிகளும் கற்றுக் கொடுக்கப்படும். மாதம் தோறும் இந்த பயிற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீப காலமாக பல்வேறு பணிச்சுமைகள் உள்ளிட்ட காரணங்களால் பயிற்சி என்பது இல்லாமல் போய்விட்டது. அவ்வாறு நடந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் தான் பங்கேற்கின்றனர். இந்த பயிற்சி இல்லாதது காவல்துறையினரை மனதை திசை திருப்பி பல்வேறு விரும்பத்தகாத செய்கைகளுக்கு அவர்களை இழுத்து செல்கிறது.
எனவே தமிழ்நாடு முழுவதும் போலீசாருக்கான பேர டு பயிற்சிகளை முறையாக நடத்த வேண்டும், அனைவரும் கண்டிப்பாக இதில் பங்கேற்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயுதப்படை மைதானங்களில் காவல் துறையினருக்கான பரேடு பயிற்சி நடந்தது.
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பயிற்சிகளை எஸ்.பி., ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 300 போலீசார் பங்கேற்றனர். தூய்மையான ஆடை அணிதல், ஷூ பாலிஷ், முடி வெட்டுதல், ஒழுக்க நெறிகளை கையாளுதல் உள்ளிட்டவை குறித்து எஸ்பி ஆய்வு செய்தார். அப்போது காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.


